கோப்பு படம். 
செய்திகள்

கடலில் தவறி விழுந்த சட்டக்கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு- உறவினர்கள் கதறல்

குளச்சலில் இருந்து விசைப்படகில் முட்டத்திற்கு சென்ற சட்டக்கல்லூரி மாணவர் கடலில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர்.

மாலை மலர்

நாகர்கோவில்:

குருந்தன்கோடு அருகே முக்கலம்பாடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெரின் ஜோஸ் (வயது 27). நெல்லை சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

குளச்சல் துறைமுக தெருவைச் சேர்ந்தவர் பினு. இவர்கள் இருவரும் நண்பர்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட குளச்சலுக்கு வந்தார். நண்பருடன் ஜெரின் ஜோஸ், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்.

பின்னர் படகில் சவாரி செய்ய இருவரும் முடிவு செய்தனர். இதையடுத்து குளச்சலில் இருந்து விசைப்படகில் முட்டத்திற்கு சென்றனர். இவர்களுடன் படகில் 40 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

மணவாளக்குறிச்சி சின்னவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஜெரின் ஜோஸ் படகில் இருந்து தவறி விழுந்தார். இது குறித்து கடலோர பாதுகாப்பு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், மீனவர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஆனால் ஜெரின்ஜோஸ் கிடைக்கவில்லை. நேற்று 2-வது நாளாக தேடியும் கிடைக்காததால் அவரது கதி என்னவென்று தெரியாத நிலையில் இருந்தது. இன்று காலை 3-வது நாளாக தேடுதல் வேட்டை நடந்தது. மீனவர்களும், கடலோர பாதுகாப்பு போலீசாரும் தேடி வந்த நிலையில் சின்ன விளை கடல் பகுதியில் காலை 6 மணியளவில் ஜெரின் ஜோஸ் பிணமாக மிதந்தார்.

இதையடுத்து போலீசாரும், மீனவர்களும் ஜெரின்ஜோசின் உடலை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்து அவரது உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர். பின்னர் ஜெரின் ஜோசின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து குளச்சல் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.