தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் 
செய்திகள்

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 300 படுக்கை வசதிகள் அதிகரிப்பு- ராதாகிருஷ்ணன் தகவல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தக்க அறிவுரை வழங்கி வருகிறார்.

மாலை மலர்

சென்னை:

தமிழ்நாட்டில் இந்த மார்ச் மாதம் கொரோனா பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் சென்னையில் மட்டும் நேற்று அதிகபட்சமாக 775 பேரும், செங்கல்பட்டில் 186 பேரும், கோவையில் 185 பேரும், கள்ளக்குறிச்சி, தேனியில் தலா 1 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 89 லட்சத்து 40 ஆயிரத்து 627 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 77 ஆயிரத்து 279 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனாவுக்கு நேற்று மட்டும் 9 பேர் மரணம் அடைந்தனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தக்க அறிவுரை வழங்கி வருகிறார்.

இதற்கு முன்பு கொரோனா பாதித்தவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டனர். வெளியில் அவ்வளவாக நடமாடுவது கிடையாது.

ஆனால் இப்போது கொரோனாவால் பாதித்தவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். அப்படிப்பட்டவர்கள் மூலம் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

நோய் பாதித்தவர்கள் நேரடியாக ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருவதால் அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக 300 படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.