கொள்ளை 
செய்திகள்

அழகு நிலைய உரிமையாளர் வீட்டில் 70 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை

அழகு நிலைய உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

மாலை மலர்

செங்குன்றம்:

சென்னையை அடுத்த புழல் டீச்சர்ஸ் காலனி 6-வது தெருவைச் சேர்ந்தவர் வேலாயுதம்(வயது 34). இவர், போரூரில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கவிதா, சினிமா நடிகைகளுக்கு அலங்காரம் செய்யும் வேலை செய்து வருகிறார்.கடந்த 30-ந்தேதி வேலாயுதம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருவண்ணாமலையில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டார்.

நேற்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த 70 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து வேலாயுதம் அளித்த புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரது வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.