திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேட்டை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது65). விவசாயி. நேற்று இரவு இவரது கூரைவீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
ஆனாலும் தீவிபத்தில் வீட்டில் இருந்த பணம், கிரைண்டர், மிக்சி மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவை எரிந்து நாசமாயின.
இதுகுறித்து தங்கராஜ் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பவல்லி, சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் தங்கராஜ் வீட்டிற்கு தீவைத்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கட்டிமேடு கடைத்தெருவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் உரிய நடவடிக்கை எடு்ப்பதாக அவர் உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.