திருப்பூர்:
திருப்பூர் பி.என். ரோடு அம்மன் நகர், ஜீவா நகர், ஜே.பி.நகர், சோழன் நகர், புதிய காமராஜ் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது:-
‘எங்கள் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு அருகில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். ஏற்கனவே எங்கள் குடியிருப்பு பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதனால்எங்கள் பகுதியில் கடும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு டாஸ்மாக் கடை வந்தால் எங்களுக்கு மேலும் சிரமம் ஏற்படும்.
எங்கள் பகுதியில் இரண்டு தனியார் பள்ளிகள், அரசு பள்ளி உள்ளன. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் இந்த டாஸ்மாக் கடையை கடந்து தான் செல்ல வேண்டும். இதனால் பெண்கள், பள்ளி குழந்தைகள் தனியாக டாஸ்மாக் கடையை கடந்து செல்வதற்கு சிரமம் ஏற்படும். எனவே புதிதாக டாஸ்மாக் கடையை திறக்க வேண்டாம்’.
இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.