கோப்பு படம். 
செய்திகள்

காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல்ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

மாலை மலர்

விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் மாரிசாமி (வயது24). இவர்அந்த பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இங்கு தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளத்தைச் சேர்ந்த மணிமுத்து (21) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இருவரும் அடிக்கடி சந்திக்க நேர்ந்த நிலையில் 2 பேருக்கும் காதல் மலர்ந்தது.

இந்தநிலையில் இவர்களது பெற்றோர் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 2 பேரும் பாதுகாப்பு கோரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்டக்குழு உறுப்பினர் முருகேசன் ஆகியோர் இவர்களை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக செயல்பாடு முடங்கியுள்ள நிலையில் வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி இருவரின் பெற்றோரையும் அழைத்து சமரசம் பேசினர். இதனைத் தொடர்ந்து அவர்களது பெற்றோர் திருமணத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.