போலீஸ் நிலையத்தில் தஞ்ச மடைந்த கமலக்கண்ணன்- ராமலட்சுமி. 
செய்திகள்

கல்லூரியில் மலர்ந்த காதல்: பேராசிரியர் ஜோடி போலீசில் தஞ்சம்

வடமதுரை அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

மாலை மலர்

வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள எரியோட்டை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 35). இவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அதே கல்லூரியில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்த ராமலட்சுமி (24) என்பவரும் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. இதையடுத்து அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதுகுறித்து தங்களது பெற்றோரிடம் அவர்கள் தெரிவித்தனர். இதற்கு இருவரின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கமலக்கண்ணனும், ராமலட்சுமியும் தங்களது வீட்டை விட்டு வெளியேறி எரியோட்டில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு அவர்கள் பாதுகாப்பு கேட்டு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று தஞ்சம் அடைந்தனர். 

இதைத்தொடர்ந்து இருதரப்பு பெற்றோரையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கமலக்கண்ணனின் பெற்றோர் ஏற்றுக்கொண்டதால், மணமக்களை அவர்களுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.