நெல்லை:
பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த சர்வதேச கடத்தல் மன்னன் முகமது ரியாஸ் அறையில் செல்போன் பயன்படுத்துவதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து ஜெயிலர் வசந்த கண்ணன் தலைமையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அப்போது சர்வதேச கடத்தல் மன்னன் அறையில் இருந்து ஒரு சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் சிறை காவலர்கள் நடத்திய சோதனையில் செல்போன், 3 பேட்டரிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி முகமது ரியாஸ் மற்றும் சிறை கைதி களான லிட்டில் ஜான், சிவராமன், சுபாஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். பறிமுதல் செய்யப்பட்ட சிம்கார்டில் இருந்து எந்தெந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டுள்ளனர் என்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் அந்த செல்போனில் இருந்து சிறை காவலர் ஒருவருக்கு அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறை அதிகாரிகள் அந்த சிறை காவலரையும் அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.