புதுடெல்லி:
மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் மாநிலங்களவைக்கு பிரபல ஆளுமைகளை ஜனாதிபதி நியமனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஸ்வபன்தாஸ் குப்தா மீண்டும் மாநிலங்களவை எம்.பி.யாக மறுநியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், மாநிலங்களவையில் ஸ்வபன்தாஸ் குப்தாவின் ராஜினாமாவால் காலியான இடத்தில் மீதமுள்ள பதவிக் காலத்துக்கு அவரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மறுநியமனம் செய்திருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள மற்றொரு தனி அறிவிக்கையில், ரகுநாத் மொகபத்ராவின் மறைவால் மாநிலங்களவையில் காலியான இடத்தில் மீதமுள்ள காலத்துக்கு வக்கீல் மகேஷ் ஜெத்மலானியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார் என தெரிவித்துள்ளது.