வைஷாலி 
செய்திகள்

தனியார் ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்தபோது 8 மாத கர்ப்பிணி மூச்சு திணறி பலி

ஆவடி தனியார் ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்தபோது, 8 மாத கர்ப்பிணி மூச்சு திணறி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாலை மலர்

சென்னை ஆவடி காமராஜர் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 28). அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வைஷாலி (வயது 25). பி.காம் பட்டதாரி. இருவருக்கும் கடந்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நடந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வைஷாலி உடல் பரிசோதனைக்காக அவரது தாயார் சரளா மற்றும் கணவருடன் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது அவருக்கு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. வைஷாலியின் கணவர் மற்றும் தாயார் சரளா ஆகியோர் வெளியில் நின்றிருந்தனர்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த டாக்டர்கள், வைஷாலிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு சுயநினைவின்றி மயங்கிய அவர், இறந்து விட்டதாக அவரது கணவர் தமிழ்மணியிடம் கூறியுள்ளனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்மணி கதறி அழுதபடி, திருமுல்லைவாயல் போலீஸ் நிலையத்தில் மருத்துவமனையின் கவன குறைவால் தான் தனது மனைவி இறந்ததாக புகார் அளித்தார். புகாரின் பேரில், திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து வைஷாலி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வைஷாலிக்கும், தமிழ்மணிக்கும் திருமணமாகி 1 வருடம் மட்டுமே ஆவதால், திருவள்ளூர் ஆர்.டி.ஓ விசாரணை நடக்கிறது.