தற்கொலை 
செய்திகள்

போச்சம்பள்ளி அருகே திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

போச்சம்பள்ளி அருகே திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் தெய்வநாயகி விசாரணை நடத்தி வருகிறார்.

மாலை மலர்

கிருஷ்ணகிரி:

திருப்பத்தூரை அடுத்த எலவம்பட்டியை சேர்ந்தவர் திருகுமரன். இவருக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டியை சேர்ந்த வித்யா (வயது 21) என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. வித்யா, தனியார் மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றி வந்தார்.

புதுப்பெண்ணான வித்யா கடந்த 3 மாதமாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்து காணப்பட்ட வித்யா நேற்று முன்தினம் வேலம்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து நாகரசம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று வித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் தெய்வநாயகியும் விசாரணை நடத்தி வருகிறார். புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.