பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி. 
செய்திகள்

மகுடஞ்சாவடி அருகே கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எடப்பாடி:

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மகுடஞ்சாவடி அருகே ஆ.புதூர் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சேலம் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அண்ணாதுரை தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட பசுமை தாயக அமைப்பாளர் பச்சமுத்து முன்னிலை வகித்தார். முத்துகணேசன், மாது, பாஸ்கர் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இதில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் எடப்பாடி நகர வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ரவி தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஊர்வலமாக சென்று கண்டன கோஷங்கள் எழுப்பி கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் நகர தலைவர் வடிவேல், நிர்வாகிகள் ஜெயக்குமார், ஏழுமலை, வைத்தி, சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

வெள்ளாண்டிவலசு கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் குமாரசாமி தலைமை தாங்கினார். சித்தூரில் பா.ம.க. மாவட்ட துணை செயலாளர் குமார் தலைமையில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேம்பனேரியில் தொகுதி அமைப்பு செயலாளர் நடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கட்சியினர் மனு கொடுத்தனர்.

SCROLL FOR NEXT