புதுடெல்லி:
பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 6 லட்சத்து 10 ஆயிரம் பயனாளிகளுக்கான நிதியுதவியை, பிரதமர் மோடி இன்று விடுவித்தார். காணொளி காட்சி வழியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. உத்தர பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அந்தந்த பகுதி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஏற்கனவே, இந்தத் திட்டத்தின் கீழ் முதல் தவணை பெற்ற 80 ஆயிரம் பயனாளிகளுக்கான இரண்டாவது தவணை தொகை மற்றும் 5 லட்சத்து 30 ஆயிரம் பயனாளிகளுக்கான முதல் தவணைத் தொகை என 2 ஆயிரத்து 691 கோடி ரூபாய் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.