போரிஸ் ஜான்சன் - பிரதமர் மோடி 
செய்திகள்

பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசியில் உரையாடல்

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை பற்றியும் பேசினார்கள். தலிபான்களுடன் ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த சர்வதேச அணுகுமுறையின் அவசியத்தை பற்றியும் விவாதித்தனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடியும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் தொலைபேசி வாயிலாக உரையாடினர். அப்போது இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழை இங்கிலாந்து அங்கீகரித்தது குறித்து பிரதமர் மோடி வரவேற்றார். இங்கிலாந்து செல்லும் இந்திய பயணிகள் கோவிஷீல்டு அல்லது இங்கிலாந்தில் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு தடுப்பூசியின் இரண்டு டோஸ்சும் எடுத்துக்கொண்டவர்கள்  அக்டோபர் 11 முதல் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டியதில்லை என சமீபத்தில் இங்கிலாந்து அரசு தெரிவித்தது. அதற்கு பிறகு 4 நாட்களில் இந்த தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது.

பிரிட்டிஷ் தூதரகம்  வெளியிட்ட அறிக்கையின் படி, ”பிரதமர் மோடியும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தும், சர்வதேச போக்குவரத்தை  மீண்டும் தொடங்குவதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதித்தனர். 

இரு தலைவர்களும் இங்கிலாந்து-இந்தியா உறவின் வலிமை மற்றும் காலநிலை மாற்றம் குறித்தும் விவாதித்தனர். மேலும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை பற்றியும் பேசினார்கள். தலிபான்களுடன் ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த சர்வதேச அணுகுமுறையின் அவசியத்தை பற்றியும் விவாதித்தனர். நாட்டில் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்... மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்யக்கோரி பிரியங்கா காந்தி மவுன விரதம்