இரவு 10 மணி வரை தொழுகை நடத்த அனுமதி கோரி முஸ்லிம் ஜமாஅத்தார்கள், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 
செய்திகள்

இரவு 10 மணி வரை பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அனுமதி பெற்று தர வேண்டும் - கலெக்டரிடம் மனு

புனித ரமலான் மாதம் தொடங்க உள்ளதால் பள்ளிவாசல்களில் இரவு 10 மணிவரை நோய்த்தடுப்பு விதிகளை பின்பற்றி தொழுகை நடத்த அனுமதி பெற்றுத்தரக்கோரி கலெக்டரிடம் அனைத்து முஸ்லிம் ஜமாஅத்தார்கள் மனு கொடுத்தனர்.

மாலை மலர்

விருதுநகர்:

தமிழக அரசு மாநிலத்தில் நோய் பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து வழிபாட்டு தலங்களில் இரவு 8 மணி வரை வழிபாடுகள் நடத்திக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

மேலும் நோய் தடுப்பு விதிமுறைகள் முறையாக வழிபாட்டுத்தலங்களில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்தநிலையில் விருதுநகர் மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாஅத்தார்கள் நேற்று கலெக்டரிடம் கோரிக்கைமனு கொடுத்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:- புனித ரமலான் மாதம் வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது. ரமலான் மாதத்தை ஒட்டி பள்ளிவாசல்களில் இரவு 10 மணி வரை தொழுகை நடத்தப்படும். இந்தநிலையில் தமிழக அரசு நோய் பரவலை தடுக்க வழிபாட்டு தலங்களில் இரவு 8 மணி வரை மட்டுமே வழிபாடு நடத்த அனுமதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

எனவே ரமலான் மாதத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இரவு 10 மணி வரை பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த உரிய அனுமதி பெற்று தர வேண்டுகிறோம்.

அரசு அறிவித்துள்ள நோய் தடுப்புவிதிமுறைகளை முறையாக பின்பற்றுவோம் என உறுதி கூறுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் கண்ணன் இது குறித்து அரசிடம் தெரிவித்து அனுமதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பதாக தெரிவித்தார்.