பெரியார் சிலை அவமதிப்பு 
செய்திகள்

சீர்காழியில் விபூதி, குங்குமப்பொட்டு வைத்து பெரியார் சிலை அவமதிப்பு

பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட தகவல் அறிந்து பெரியார் திராவிடர் கழகத்தினர் சிலை முன்பு குவிந்தனர்.

மாலை மலர்

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே பெரியார் சிலை உள்ளது. இந்த சிலைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் சார்பில் பாதுகாப்பு கூண்டு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மதியம் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நெற்றியில் விபூதி, குங்குமப் பொட்டு வைத்து அவமதிக்கப்பட்ட புகைப்படம் முகநூலில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் உடனடியாக அங்கு சென்று பெரியார் சிலையில் அணிவிக்கப்பட்டு இருந்த மாலைகளை அகற்றி, விபூதி, குங்கும பொட்டு ஆகியவற்றை அழித்து சிலையை சுத்தம் செய்தனர். இந்த நிலையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட தகவல் அறிந்து பெரியார் திராவிடர் கழகத்தினர் சிலை முன்பு குவிந்தனர்.

பெரியார் சிலைக்கு விபூதி, குங்குமம் இட்ட நபர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து சீர்காழி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.