கரம்பயம் கிராமத்தில் திருமணமாகாத இளைஞர்கள் சிலரால் வைக்கப்பட்டுள்ள வித்தியாசமான பேனர் 
செய்திகள்

“வருத்தப்படாத வாலிபர் சங்கம் போல...” திருமணமாகாத இளைஞர்கள் வைத்த பேனர்

கரம்பயம் கிராமத்தில் திருமணமாகாத இளைஞர்கள் சிலரால் வைக்கப்பட்டுள்ள வித்தியாசமான பேனர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாலை மலர்

பட்டுக்கோட்டை:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது கரம்பயம் கிராமம். இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு திருமண வரன் பார்க்க வருபவர்களிடம் சிலர் அவதூறாக கூறி திருமண வரனை தடுத்து நிறுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் பலரது திருமணம் தடைப்பட்டு போவதாக பிள்ளைகளின் பெற்றோர்கள் வேதனை அடைந்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட திருமணம் ஆகாத சில இளைஞர்கள் ஒன்று கூடி அப்பகுதியில் சோதனையை வெளிபடுத்தும் விதமாக, ஆனால் யார் மனதையும் புண்படுத்தாமல் சுவாரஸ்யமான பேனர் வைத்துள்ளனர்.

அதில் “கரம்பயத்தில் வந்து விசாரிக்கும் அனைத்து திருமண வரன்களையும் தடுத்து நிறுத்தும் அனைத்து நெஞ்சங்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றி. இந்த பணியை செய்பவர்கள் சில பெண்கள், சில ஆண்கள் மற்றும் ஒரே ஒரு டீக்கடை வைத்திருப்போர் மட்டுமே. இவர்களது நற்பணி மேலும் தொடர்ந்தால் இனிவைக்கப்படும் விளம்பர பேனரில் தங்களுடைய பெயர், புகைப்படம் மற்றும் ஆதாரங்களுடன் வெளியிடப்படும்.

இப்படிக்கு திருமண வரம் தேடும் இளைஞர்கள், கரம்பயம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பேனர் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பேனரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.