விஷம் 
செய்திகள்

பண்ருட்டி அருகே கள்ளக்காதலியுடன் கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை

பண்ருட்டி அருகே கள்ளக்காதலியுடன் கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எல்.என்.புரம் அக்ரஹார தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மனைவி ஜோதிலட்சுமி (வயது 42). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

அண்ணாதுரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதற்கிடையில் பண்ருட்டி பகுதிக்கு கொத்தனார் வேலைக்காக வந்த குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சின்னக்கண்ணாடி ஆடூரை சேர்ந்த செல்வம் மகன் தண்டபாணி (32) என்பவருடன் ஜோதிலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறியது.

இதைத்தொடர்ந்து இருவரும் கணவன், மனைவி போல ஜோதிலட்சுமியின் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் ஜோதிலட்சுமிக்கு காச நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதில் அவர் மிகவும் அவதிப்பட்டு வந்தார். இதனால் 2 பேரும் இனி உயிரோடு இருப்பதைவிட சாவதே மேல் என்று முடிவு செய்ததாக தெரிகிறது.

இதையடுத்து நேற்று மதியம் தண்டபாணியும், ஜோதிலட்சுமியும் விஷத்தை எடுத்து குடித்து விட்டனர். இதில் தண்டபாணி வீட்டை விட்டு வெளியேறி தெருவோரத்தில் மயங்கி விழுந்து இறந்தார். ஜோதிலட்சுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் வீட்டிலேயே மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜோதிலட்சுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.