பனமரத்துப்பட்டி:
பனமரத்துப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட ஈச்சமரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள் (வயது 45). கிழங்கு மில் தொழிலாளி. இவர் நேற்று மாலை பனமரத்துப்பட்டி அருகே உள்ள காந்திநகர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து பனமரத்துப்பட்டி நோக்கி வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த அருள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அந்த கார் அருகில் இருந்த அதே பகுதியை சேர்ந்த பாப்பம்மாள் (55) என்பவர் மீதும் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.