ராமேஸ்வரம்:
தமிழக கடலோர பகுதியில் கடலில் மீன் வளத்தை பெருக்கவும், கடலில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மத்திய அரசு அறிவிப்பின்படி மாநில அரசு கடந்த ஏப்ரல் 14-ந் தேதி நள்ளிரவு முதல் தொடங்கி 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் விதித்திருந்தது.
இந்த மீன்பிடி தடை காலம் கடந்த 14-ந் தேதி நள்ளிரவோடு முடிந்தது. இதனையடுத்து பாம்பன் பகுதி மீனவர்கள் இந்த 61 நாள் மீன்பிடித்தடை காலத்தில் படகுகளை கரையோரத்தில் ஏற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த பணிகள் கடந்த திங்கட்கிழமையோடு முடிக்கப்பட்டு மீன்பிடிக்க செல்வதற்கு தயார் நிலையில் மீனவர்கள் இருந்தனர். சுழற்சி முறையில் இன்று அதிகாலையில் மீன்துறை அலுவலகத்தில் மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டைப் பெற்றுக்கொண்டு 63 நாட்களுக்கு பின்பு 96 படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க காலையில் புறப்பட்டு சென்றனர்.