நெல்லை:
பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று முன்தினம் கைதிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. அப்போது, விசாரணை கைதியான வாகைகுளத்தை சேர்ந்த முத்து மனோ என்ற வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தை கண்டித்து அவரது உறவினர்கள் மற்றும் வாகைகுளம் கிராம மக்கள் நேற்று சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பவத்துக்கு உடந்தையாக சிறை அதிகாரிகளும் செயல்பட்டதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் சிறையில் கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறைத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறை துணை ஜெயிலர் சிவன், உதவி ஜெயிலர்கள் கங்காதரன், சங்கரசுப்பு, ஆனந்தராஜ், தலைமை வார்டன் வடிவேல் முருகையா, சிறைக்காவலர் சாம் ஆல்பர்ட் ஆகிய 6 ேபரை பணி இடைநீக்கம் செய்து சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி உத்தரவிட்டு உள்ளார். அவர்கள் 6 பேரிடமும் விசாரணை நடத்தி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.