ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்தவர் ஹரிதாஸ் (வயது 59). பெயிண்டர். இவர் அம்பிளிக்கை அருகே உள்ள நவகாணி கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். மோட்டார்சைக்கிளின் பின்புறம் திண்டுக்கல் சந்தை ரோட்டை சேர்ந்த சந்திரசேகர்(52) உட்கார்ந்து இருந்தார்.
இவர்கள் ஒட்டன்சத்திரம்-தாராபுரம் ரோட்டில் அம்பிளிக்கை பஸ்நிலையம் அருகே ரோட்டை கடக்க முயன்றனர். அப்போது மதுரையிலிருந்து தாராபுரம் நோக்கி சென்ற கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஹரிதாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். சந்திரசேகர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து அம்பிளிக்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.