அமைச்சர் மா.சுப்பிரமணியன் 
செய்திகள்

ஆக்சிஜன் தட்டுப்பாடு இனிமேல் வராது- அமைச்சர் தகவல்

தனியார் மருத்துவ மனைகளும் ஆக்சிஜன் தேவைப்பட்டால் 104 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால் உடனே ஏற்பாடு செய்யப்படும்.

சென்னை:

தமிழகத்தில் இனி ஆக்சிஜன் தட்டுப்பாடு வராது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

தமிழகத்தின் ஆக்சிஜன் தேவைக்காக 419 மெட்ரிக்டன் ஆக்சிஜனை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கேரள மாநிலத்தில் இருந்து 40 மெட்ரிக்டன் வருகிறது. இதுதவிர தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் இருந்து அடுத்த சில நாட்களில் 35 மெட்ரிக்டன் அளவு கிடைக்கும். எனவே இனிமேல் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாது. தனியார் மருத்துவ மனைகளும் ஆக்சிஜன் தேவைப்பட்டால் 104 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால் உடனே ஏற்பாடு செய்யப்படும்.

ரெம்டெசிவிர் மருந்தை பொருத்தவரை 2 லட்சம் குப்பிகள் வர உள்ளது. வருகிற 21-ந் தேதி முதல் மருந்து உற்பத்தி நிலையங்கள் கூடுதலாக உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளன. எனவே அந்த தட்டுப்பாடும் விரைவில் சீராகும்.

கொரோனா சிகிச்சைக்கு சித்தமருத்துவ சிகிச்சை மையங்கள் 12 தொடங்கப்படுகிறது. 1410 அரசு சித்தமருத்துவர்கள் இருக்கிறார்கள். தனியார் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முன்வந்தாலும் தேவையான உதவிகளை அரசு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.