நெல்லை:
பாளையங்கோட்டை நொச்சிகுளத்தை சேர்ந்தவர் கோபால். இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 60). இவருக்கும், பேரன் உறவுமுறை கொண்ட மைனர் முத்து (35) என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி இரவில் மாரியம்மாளின் வீட்டுக்கு சென்ற மைனர் முத்து, மாரியம்மாளின் வீட்டை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு கூறி தகராறு செய்தார். இதனை மாரியம்மாளின் மகன் சண்முகராஜ், அவருடைய மனைவி மனோரம்மாள் ஆகியோர் தட்டி கேட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த மைனர்முத்து தன்னுடைய உறவினர்களுடன் சேர்ந்து மாரியம்மாள், சண்முகராஜ், மனோரம்மாள் ஆகிய 3 பேரையும் உருட்டுக்கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த மாரியம்மாள் உயிரிழந்தார். சண்முகராஜ், மனோரம்மாள் ஆகிய 2 பேருக்கும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மைனர்முத்துவின் உறவினரான கூலி தொழிலாளி மாரியப்பனை (35) போலீசார் நேற்று முன்தினம் இரவில் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான மைனர் முத்து நேற்று நெல்லை 5-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து மைனர் முத்துவை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.