திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டவழங்கல் அலுவலராக பணிபுரிந்து வருபவர் சரவணன். இவர் புதிய குடும்ப அட்டை வழங்க பொதுமக்களிடம் ரூ.500 வீதம் வசூலித்து வந்துள்ளார். ஆர்.புதுக்கோட்டையை அடுத்த பள்ளபட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் புதிய குடும்ப அட்டை வாங்க வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றபோது அவரிடமும் ரூ.500 பணம் தருமாறு சரவணன் கேட்டுள்ளார்.
தன்னிடம் ரூ.200 மட்டுமே உள்ளதாக அவர் கூறியுள்ளார். அதை வாங்கி கொண்டு மீதி பணத்தை நாளைவந்து தருமாறு கூறியுள்ளார். இதுகுறித்து இந்தியகம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலுபாரதி குஜிலியம்பாறை வட்டாட் சியர் அலுவலகத்திற்கு சென்று வட்டவழங்கல் அலுவலரிடம் எதற்காக பயனாளிகளிடம் பணம் கேட்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த உரையாடல் முழுவதும் பதிவாக சமூகஊடகங்களில் வெளியானது. இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். சரவணன் லஞ்சம் வாங்கியது உண்மை என தெரியவரவே அவரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.