ஆங்கில புத்தாண்டு நாடு முழுவதும் நேற்று அனைவராலும் கொண்டாடப்பட்டது. இரவு கண்விழித்து ஆர்வமாக இளைஞர்கள் பலர் புத்தாண்டு கொண்டாடியதுடன், செல்போன்கள் மூலம் தங்கள் வாழ்த்துகளை நண்பர்கள், தோழிகளுடன் பரிமாற்றம் செய்து கொண்டனர்.
திருச்சியில் இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட சில கட்டுப்பாடுகளை மாநகர போலீசார் விதித்திருந்தனர். எனவே, இரவு முழுவதும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சாலைகளில் வேகமாக இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்களை போலீசார் தடுத்து, அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இருப்பினும் சில பொது இடங்களில் கேக் வெட்டியும் புத்தாண்டினை கொண்டாடினர்.
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளுக்கான, மகப்பேறு பிரிவில் கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு தினமும் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்கின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆங்கில புத்தாண்டு பிறந்தது. நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மாலை வரை, திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு பிரிவில் புத்தாண்டு அன்று 20 குழந்தைகள் பிறந்தன. அவற்றில் 10 ஆண் குழந்தை, 10 பெண் குழந்தைகள் ஆவர் என டீன் டாக்டர் வனிதா தெரிவித்தார்.