புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டுவது குறித்து சபாநாயகர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபோது எடுத்த படம். 
செய்திகள்

தட்டாஞ்சாவடியில் ரூ.220 கோடியில் புதிய சட்டமன்ற கட்டிடம்- சபாநாயகர் தலைமையில் ஆலோசனை

புதிய கட்டிடம் கட்டுவதற்கான தோராயமான மதிப்பீட்டு தொகையை கணக்கிட சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்குழு அமைந்துள்ள இடத்தில் புதிய சட்டமன்ற கட்டிடம் கட்ட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்டது. ஆனால் அது செயல் வடிவம் பெறாமல் போய்விட்டது.

இந்தநிலையில் மீண்டும் புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டும் திட்டம் கையில் எடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் நாடாளுமன்ற சபாநாயகர் பிற மாநில சபாநாயகர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது புதுவையில் புதிய சட்டமன்ற வளாகம் கட்ட ரூ.220 கோடி வழங்கவேண்டும் என்று சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வலியுறுத்தினார்.

இந்தநிலையில் சட்டமன்றம் மற்றும் தலைமை செயலகம் இணைந்த புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பாக சபாநாயகர் அலுவலகத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.பி. ரமேஷ், அசோக் பாபு, பொதுப்பணித்துறை செயலாளர் விக்ராந்த் ராஜா, துணை கலெக்டர் கந்தசாமி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, வேளாண் துறை இயக்குனர் பாலாகாந்தி, சட்டசபை செயலாளர் முனுசாமி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது புதிய கட்டிடம் கட்டுவதற்கான தோராயமான மதிப்பீட்டு தொகையை கணக்கிட சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மேலும் எந்த வடிவமைப்பில் கட்டிடம் கட்டுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.