ரத்தமாதிரிகளுடன் குவிந்து கிடந்த ஊசிகளை காணலாம். 
செய்திகள்

ரத்த மாதிரிகளுடன் குவிந்து கிடந்த ஊசிகள்- வீசி சென்றவர்கள் யார்?

நன்னிலம் அருகே ரத்த மாதிரிகளுடன் ஊசிகள் குவிந்து கிடந்தது. இதனை வீசி சென்றவர்கள் யார்? என்று சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தினார்.

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே திருக்கண்டீஸ்வரம்- சோத்தகுடி இணைப்புச்சாலை உள்ளது. இந்த சாலை முடிகொண்டான் ஆற்றின் கரையோரம் உள்ளது. நேற்று இந்த சாலையோரத்தில் ரத்தமாதிரிகளுடன் 200-க்கும் மேற்பட்ட ஊசிகள் குவிந்து கிடந்தன.

இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் நன்னிலம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜோதி சம்பவ இடத்திற்கு வந்து குவிந்து கிடந்த ஊசிகளை சேகரித்து விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த ரத்தமாதிரி ஊசிகள் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயன்படுத்தக்கூடியது இல்லை. தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் இந்த ரத்தமாதிரி ஊசிகள் பயன்படுத்தப்படுகிறது.

இதனை இங்கு வீசி சென்றவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த ஊசிகள் உடனடியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT