நொய்யல்:
கரூர் மாவட்டம், நொய்யல் புன்னம்சத்திரம் அருகே அய்யனூர் பகுதியை சேர்ந்தவர் குருசாமி (வயது 59). இவர் நடுப்பாளையத்தில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் கல்குவாரி வைத்து நடத்தி வருகிறார். இந்த கல்குவாரியில் வட மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் 7 பேரும் கல்குவாரி அருகே உள்ள குடியிருப்பில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் பீகார் மாநிலம் முஜப்பூர் பகுதியை சேர்ந்த தானேஸ்வர்ஷா (51) என்பவர் நேற்று முன்தினம் கல்குவாரியில் வேலையை முடித்துவிட்டு இரவு சுமார் 10 மணி அளவில் கல்குவாரி அருகே உள்ள தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு தூங்க சென்று விட்டார்.
பின்னர் காலை 5 மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டிய நேரத்தில் அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் அவருடன் வேலை பார்த்து அதே பகுதியில் குடியிருந்து வரும் வடமாநில தொழிலாளி சுரேஷ் என்பவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அவர் படுத்திருந்ததாகவும் அவரை எழுப்பிய போது அவர் எழுந்திருக்க வில்லை என கூறப்படுகிகிறது.
இதுகுறித்து கல்குவாரியின் உரிமையாளர் குருசாமிக்கு சுரேஷ் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குருசாமி ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு தானேஸ்வர்ஷாவை கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து குருசாமி வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, தானேஸ்வர்ஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தானேஸ்வர்ஷா மர்மசாவு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு திருமணமாகி 4 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.