கோப்புபடம் 
செய்திகள்

பி.எம்.கேர்ஸ் வழங்கிய 150 வெண்டிலேட்டர்களில் 113 பழுது - மத்திய அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு கண்டனம்

மராட்டியத்தில் பி.எம். கேர்ஸ் நிதியில் இருந்து வழங்கப்பட்ட 150 வெண்டிலேட்டர்களில் 113 வெண்டிலேட்டர்கள் பழுதானவை என்ற வழக்கு தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மாலை மலர்

மும்பை:

மராட்டியத்தில் பி.எம். கேர்ஸ் நிதியில் இருந்து வழங்கப்பட்ட 150 வெண்டிலேட்டர்களில் 113 வெண்டிலேட்டர்கள் பழுதானவை என்ற வழக்கு தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல மாநிலங்கள் மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் திண்டாடின. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக செய்தி வெளியானது.

மத்திய அரசு பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து வெண்டிலேட்டர்களை பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கியது. ஆனால் பல இடங்களில் பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் செயல்படவில்லை என்று புகார்கள் வந்தன.

இதேபோல் மராட்டிய மாநிலம் மராத்வாடாவுக்கு பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து அனுப்பப்பட்ட 150 வென்டிலேட்டர்களில் 113 வென்டிலேட்டர்கள் சரிவர இயங்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த மராட்டிய அரசு,’ இந்த வெண்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட இருந்தன’ என்று கூறியது.

இந்த வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு நீதிபதிகள், ‘ இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது. வெண்டிலேட்டர்கள் உயிர்காக்கும் சாதனங்களாகும். அவை சரியாக வேலை செய்யாவிட்டால் நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். உயிருடன் விளையாடுகிறீர்களா? இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.