விபத்து 
செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்: ஒருவர் பலி

குடவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதி தம்பி பரிதாபமாக இறந்தார். மேலும் அண்ணன் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

குடவாசல்:

திருவாரூர் துர்க்காலயா தெருவை சேர்ந்தவர் ராஜரத்தினம்(வயது45). இவரது தம்பி செந்தில்குமார்(43). இந்தநிலையில் நேற்றுமுன்தினம் ராஜரத்தினம் மோட்டார்சைக்கிளில் செந்தில்குமாரை அழைத்து கொண்டு திருவையாறுக்கு சென்றுள்ளார். அப்போது திருவாரூரிலிருந்து மணக்காலுக்கு சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது. இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜரத்தினம், செந்தில்குமார் ஆகியோர் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

படுகாயமடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். மேலும் ராஜரத்தினத்துக்கு அங்கு தீ்விர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து ராஜரத்தினம் கொடுத்த புகாரின் பேரில் குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரக்கு வேன் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.