மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 59). இவர் மதுரை அரசு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று பணி முடிந்து பெரியகுளம் தண்டுபாளையத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றார்.
பணம் எடுத்து விட்டு வெளியே வந்த போது அங்கிருந்த 4 பேர் அதனை பறிக்க முயன்றனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரையும் பிடித்து தென்கரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் கள்ளிப்பட்டியைச் சேர்ந்த காளிதாஸ் (18), முத்து பிரபாகரன் (22), சேவுகப்பெருமாள் (23), அபிலேஷ் (20) என தெரிய வந்தது.
இவர்கள் 4 பேரும் பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள். இதனையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.