கோப்புப்படம் 
செய்திகள்

100 நாளில் பணம் இரட்டிப்பாகும் என சென்னையில் மோசடி: ரூ.15 லட்சம் வரை பணத்தை இழந்த பொதுமக்கள்

விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் தென் மாவட்டத்தினர் பலர் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.15 லட்சம் வரையில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்து இருப்பது தெரியவந்துள்ளது.

மாலை மலர்

சென்னை கோடம்பாக்கத்தில் ‘ஏஞ்சல் டிரேடிங்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் ஒன்று பொதுமக்கள் அளிக்கும் முதலீட்டு பணம் 100 நாட்களில் இரட்டிப்பாகும் என்று விளம்பரம் செய்து இருந்தது.

இதனை நம்பி சென்னையில் உள்ள பொதுமக்கள் பலர் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.15 லட்சம் வரை பணத்தை முதலீடு செய்தனர். இதன் மூலம் ஏஞ்சல் டிரேடிங் கம்பெனி கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்தது.

ஆனால் அவர்கள் உறுதி அளித்தபடி பணத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கவில்லை. இதையடுத்து சென்னை ஆவடி கோவில்பதாகையை சேர்ந்த நடராஜன் என்பவர் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த 2019-ம் ஆண்டு இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நிறுவனத்தின் உரிமையாளர் தியாகபிரகாசம் தலைமறைவானார். தற்போது மத்திய குற்றப் பிரிவு போலீசார் இதன் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமி‌ஷனர் தேன்மொழி, துணை கமி‌ஷனர் நாகஜோதி, உதவி கமி‌ஷனர் சுரேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் மோசடி பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த தியாக பிரகாசத்தை, இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர்.

திருச்சியை சேர்ந்த இவர் சென்னை கோட்டூர்புரம் பாரதி அவென்யூவில் வசித்து வந்தார். போலீஸ் விசாரணைக்கு பிறகு தியாகபிரகாசம் சிறையில் அடைக்கப்பட்டார். 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் முருகேசன் கையில் எடுத்து துப்புதுலக்கி கைது நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து போலீஸ் கமி‌ஷனர் சங்கர் ஜிவால் மற்றும் உயர் அதிகாரிகள் அவரை பாராட்டினர்.

அதே நேரத்தில் போலீஸ் விசாரணையின் போது ரூ.100 கோடி அளவுக்கு பணப்பரிவர்த்தனை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றனர்.

ஏஞ்சல் டிரேடிங் நிறுவனத்தில் பொதுமக்களை சேர்த்துவிடுவதற்காக பல ஏஜெண்டுகளும் செயல்பட்டுள்ளனர். அவர்களுக்கும் கமி‌ஷன் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று செயல்பட்ட ஏஜெண்டுகள் பலர் லட்சக்கணக்கில் பணம் வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

அவர்கள் யார், யார் என்பது பற்றியும், இந்த மோசடியின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றியும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் தென் மாவட்டத்தினர் பலர் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.15 லட்சம் வரையில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

சிறு வணிகர்கள் பலரும் மோசடி நிறுவனத்தில் தாங்கள் சிறுக, சிறுக சேமித்த பணத்தை முதலீடு செய்து மொத்தமாக அதை இழந்துள்ளனர்.

100 நாளில் பணம் இரட்டிப்பாகிவிடும் என்கிற ஆசையில் முதலீடு செய்த பலர் தங்களது நகைகளை அடமானம் வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் பணம் செலுத்தியது தெரிய வந்துள்ளது.

சென்னையில் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் அலை அலையாக சென்று இந்த நிறுவனத்தில் பணத்தை கொட்டி உள்ளனர்.

மோசடியில் ஈடுபட்டு கைதான தியாகபிரகாசத்தின் வங்கிக்கணக்கில் தற்போது எந்த பணமும் இல்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் பொதுமக்களிடம் இருந்து வசூலித்த பணத்தை பல வழிகளில் முதலீடு செய்து இருக்கலாம் என்றும், அதுதொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதற்காக தியாக பிரகாசத்தை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... ஆப்கானிஸ்தானில் இருந்து இன்று மேலும் 180 பேர் 2 விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர்