மோகனூர்:
மோகனூர் ஒருவந்தூர் சாவடி தெருவை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 23). இவர் மோகனூர் கடைவீதியில் உள்ள ஒரு டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து
வந்தார். இவர் இரவு வேலை முடிந்து கடையின் மேல் மாடியில் தங்கி கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக உடல் நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கடையில் வேலை முடித்துவிட்டு
மேல்மாடியில் படுக்க சென்றுள்ளார். மறுநாள் காலையில் பார்த்தபோது மேல் மாடியின் படிக்கட்டு கிரில் கம்பியில் நைலான் கயிரில் தூக்குப்போட்டு அவர்
தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து அங்கிருந்தவர்கள், அவரது பெற்றோர்க்கு கொடுத்த தகவலின் பேரில் அவரது உறவினர் குமார் என்பவர் மோகனூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த
புகாரின் பேரில், போலீசார் பிணத்தை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு
பிறகு அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையில் செல்லமுத்து தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு உருக்கமான கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும்,
என்னை மன்னித்துவிடுங்கள். உங்களை விட்டு போக மனசு இல்லை என உருக்கமாக எழுதி வைத்திருந்ததாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி, செல்லமுத்துவின் தற்கொலைக்கு வேறு காரணம் எதுவும் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.