ஆரணி:
ஆரணி தாலுகாவைச் சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிளஸ்-2 முடித்துள்ளார். இவருக்கும், தஞ்சாவூரை அடுத்த அம்மாப்பேட்டையைச் சேர்ந்த உறவினர் மகனான அருண்குமார் என்பவருக்கும் வரும் 27-ந்தேதி காஞ்சீபுரத்தில் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி குழந்தைகள் நலக் குழும அலுவலர் அம்சா, ஆரணி விரிவு அலுவலர் ருக்மணி, ஊர் நல அலுவலர் ஞானம்மாள் ஆகியோர் சம்பந்தப்பட்ட மைனர் பெண்ணின் வீட்டுக்குச் சென்றனர்.
அங்கிருந்த மைனர் பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பெண்ணுக்கு திருமணம் நடக்கயிருப்பது உண்மை எனத் தெரிய வந்தது. இதையடுத்து மைனர் பெண்ணின் திருமணத்தைத் தடுத்து நிறுத்தி, பெற்றோரை அதிகாரிகள் எச்சரித்தனர். பின்னர் மைனர் பெண்ணை மீட்டு திருவண்ணாமலையில் உள்ள காப்பகத்தில் சேர்த்தனர்.