விழாவில் புதிய பாலத்தை திறந்து வைத்து அமைச்சர் காமராஜ் பேசிய போது எடுத்தபடம். 
செய்திகள்

அரசலாற்றில் ரூ.3¼ கோடி செலவில் புதிய பாலம்- அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்

குடவாசல் அருகே உள்ள எரவாஞ்சேரி- மருத்துவக்குடியை இணைக்கும் வகையில் ரூ.3¼ கோடி செலவில் அரசலாற்றில் கட்டப்பட்ட புதிய பாலத்தை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்.

மாலை மலர்

குடவாசல்:

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் எரவாஞ்சேரி- மருத்துவக்குடி ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் அரசலாற்றில் ரூ.3 கோடியே 25 லட்சம் செலவில் புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பாலத்தின் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார்.

கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், ஒன்றியக்குழு தலைவர் கிளாரா செந்தில், துணைத்தலைவர் தென்கோவன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பாப்பா சுப்பிரமணியன், ஒன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு பாலத்தை திறந்து வைத்து பேசுகையில், ‘நன்னிலம் தொகுதிக்கென எதைக்கேட்டாலும் செய்யக்கூடியவர் முதல்-அமைச்சர். வருகிற காலம் தேர்தல் காலம். எனவே தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை மேலும் நமது தொகுதியில் செயல்படுத்திட நீங்கள் அனைவரும் இந்த அரசுக்கு ஆதரவு தர வேண்டும்.

குடவாசல் ஒன்றியத்தில் பாலங்கள் இல்லாத ஊரே இல்லை’ என்றார். விழாவில் முன்னாள் எம்.பி. கோபால், மாவட்ட குழு உறுப்பினர் ராஜேந்திரன், கோவை தொடக்க கூட்டுறவு வங்கி தலைவர் சுவாமிநாதன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆறுமுகம், சுப்பிரமணியன், குடவாசல் தினகரன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பரக்கத் நிஷா, பொறியாளர்கள் வெங்கடேசன், ரமேஷ்குமார், வினோத்குமார், அ.தி.மு.க. நகர செயலாளர் சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.