சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே இடைச்சிவிளை நல்லம்மாள் புரத்தைச் சேர்ந்த பாஸ்கர் (வயது 61). வியாபாரி. இவர் வாகனத்தில் சென்று மிட்டாய் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ரூபாவதி(55). இவர்களுக்கு ஒரு பெண் இருக்கிறார். அவருக்கு. திருமணம் ஆகிவிட்டது.
நேற்று முன்தினம் இரவு கணவரிடம் கிறிஸ்துமஸ் பண்டிகை செலவுக்காக பணம் கேட்டார். வியாபாரம் சரிவர நடக்காததால், தன்னிடம் பணம் இல்லை என்று கூறி, செலவுக்கு பணம் தர மறுத்துவிட்டாராம். இதனால் கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டது. பின்னர் இருவரும் வீட்டில் தூங்கச் சென்றனர். நேற்று காலையில் எழுந்த பாஸ்கர் வீட்டிற்குள் ரூபாவதி விஷம் குடித்து தற்கொலை செய்து பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அவர் கதறி அழுதார்.
இதுகுறித்து அவர் கொடுத்த தகவலின் பேரில், தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி சம்பவ வீட்டுக்கு விரைந்து சென்று ரூபாவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.