மன்னார்குடி:
மன்னார்குடியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி மறைந்த நம்மாழ்வார் நினைவு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவிரி உரிமை மீட்புக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாரதிசெல்வன் தலைமை தாங்கினார். இதில் காவிரி மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கலந்துகொண்டு முன்னோடி விவசாயிகளுக்கு நம்ம ஊரு நம்மாழ்வார் என்ற விருதுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நம்மாழ்வார் வாழ்நாள் முழுவதும் இயற்கையை காக்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் தனது இறுதிக்காலம் வரை பாடுபட்டார்.
இயற்கை விவசாயத்தை நோக்கி இளைஞர்களை இழுத்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. தமிழர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையை மீட்டெடுக்கவும், அதை கடைபிடிக்கவும் கடுமையாக அவர் பாடுபட்டார். நம்மாழ்வாரை நினைவு கூறுவதோடு நிறுத்திவிடாமல் அவரின் நோக்கத்தை முழுமையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் காவிரி உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் கலைச்செல்வம், ராஜசேகரன், அரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.