மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் அதிக அளவில் மதுபாட்டில்கள் விற்பனை நடைபெறும். இந்த டாஸ்மாக் கடையில்
மேற்பார்வையாளராக சரவணனும்(வயது 48), விற்பனையாளர்களாக இளவரசன், ஆறுமுகம் ஆகியோரும் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மதுபாட்டில்கள் விற்பனை முடிந்த பின்னர் இரவில் விற்பனையாளர் இளவரசன் கடையை பூட்டி விட்டு சென்றார். இந்நிலையில் நள்ளிரவில் மர்ம
நபர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். ஆனால் கடையில் பணம் எதுவும் இல்லாததால், விலை உயர்ந்த மது பாட்டில்களை
திருடிச்சென்றனர்.
நேற்று காலை அப்பகுதி வழியாக சென்றவர்கள் டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகளை சேகரித்தனர். கடையில் திருட்டு போன மது பாட்டில்களின் மொத்த மதிப்பு ரூ.18 ஆயிரத்து 970 இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த திருட்டு குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.