வீடு புகுந்து கொள்ளை 
செய்திகள்

மங்களமேடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு

மங்களமேடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

மாலை மலர்

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள காரைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது 44). இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சாந்தி, மகன்களுடன் ஊருக்கு சென்றுள்ளார். அவர்களை அழைத்து வருவதற்காக நேற்று முன்தினம் செல்வகுமார், வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது உள் அறையில் இருந்த பீரோவை திறந்து, அதில் இருந்த 5 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது, தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.

கைரேகை நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை சேகரித்து சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் கதிரவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.