தேனி:
தேனி நேரு சிலை அருகே சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்த் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சின்னமனூர் வ.உ.சி. 4-வது தெருவை சேர்ந்த சரவணன் (வயது41) என்பவர் காரை ஓட்டி வந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில் திருமணத்திற்கு செல்வதாக கூறி தான் இ-பதிவு பெற்ற ஆவணத்தை காட்டினார். போலீசார் அதனை ஆய்வு செய்தபோது துக்க நிகழ்ச்சிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது தெரிய வந்தது.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் சின்னமனூரில் செயல்படும் தனியார் கம்ப்யூட்டர் சென்டர் மூலம் தான் ஆவணம் பெற்றதாகவும் அதன் உரிமையாளர் பிரகாஷ் என்பவர் தனக்கு ஆவணம் தயாரித்து கொடுத்ததாகவும் கூறி உள்ளார்.
திருமணத்திற்கு செல்வதாக பதிவு செய்ய வேண்டிய இடத்தில் துக்க நிகழ்ச்சிக்கு செல்வதாக பதிவு செய்திருந்ததை சரவணனும் கவனிக்காமல் அதனை போலீசாரிடம் காட்டி உள்ளார்.
இதனால் போலீசார் அவர் வந்த காரை பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர். மேலும் போலி இ-பதிவு ஆவணம் தயாரித்து கொடுத்த பிரகாஷ் என்பவரை தேடி வருகின்றனர்.