கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் பிஸ்வாஸ் (வயது 40). எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர். இவர் தனது குடும்பத்தினருடன் கேரளாவில் இருந்து காரில் கோவைக்கு வந்தார். அவர், காந்திபுரத்தில் கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் மதுக்கரை அருகே குரும்பப்பாளையம் பிரிவு சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மதுக்கரையை சேர்ந்த லாரி டிரைவர் சசிகுமார் (24), பிரபு (26), பிரவீன் (24) ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் மீது மோதுவது போல் கார் வந்துள்ளது. இதனால் அவர்கள் 3 பேரும் காரில் வந்தவர்களுடன் தகராறு செய்து கார் கண்ணாடியை உடைத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் மதுக்கரை போலீசார் வழக்கு பதிவுசெய்து, குடிபோதையில் கார் கண்ணாடியை உடைத்த சசிகுமார், பிரபு ஆகிய 2 பேரை கைது செய்தனர். பிரவீன் என்பவரை தேடி வருகின்றனர்.