இந்தூர் :
மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ராமேஸ்வர் படேல், இந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்த்து நலம் விசாரிப்பதற்காக முன்னாள் முதல்வர் கமல்நாத், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் சஜ்ஜன் சிங் வர்மா, ஜிது பட்வாரி ஆகியோர் சென்றனர். இவர்கள் மருத்துவமனைக்கு சென்ற அவர்கள், அங்கிருந்த லிப்டை பயன்படுத்தினர். ஆனால், அந்த குறிப்பிட்ட மாடிக்கு சென்ற பின்னர் திடீரென லிப்ட் பழுதாகி நின்றது. லிப்டுக்குள் கமல்நாத் உள்ளிட்ட 10 பேர் சிக்கி கொண்டனர். ஒருகட்டத்தில் அந்த லிப்ட் திடீரென 10 அடி உயரத்தில் இருந்து கீழே இறங்கியது. அதிர்ச்சியடைந்த கமல்நாத் உள்ளிட்ட நிர்வாகிகள், மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் ஒரு பொறியாளரை அனுப்பி வைத்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின் லிப்டின் கதவுகள் உடைக்கப்பட்டு அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர்.
அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. விபத்து குறித்த தகவலறிந்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கமல்நாத்தை தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார்.
இதுகுறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்ட டுவிட்டில், ‘லிப்டில் கமல்நாத் சிக்கியது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடுகளால் கமல்நாத் ஆபத்தில் சிக்கியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.