கோப்புப்படம் 
செய்திகள்

கடலில் மூழ்கி மாயமான சட்டக்கல்லூரி மாணவரை 2வது நாளாக தேடும் பணி தீவிரம்

கடலில் மூழ்கி மாயமான சட்டக்கல்லூரி மாணவரை 2-வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாலை மலர்

நாகர்கோவில்:

குருந்தன்கோடு அருகே முக்கலம்பாடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெரின் ஜோஸ் (வயது 27), சட்டக்கல்லூரி மாணவர்.

குளச்சல் துறைமுக தெருவைச் சேர்ந்தவர் பினு (29). இவர்கள் இருவரும் நண்பர்கள். ஜெரின் ஜோஸ் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தனது நண்பர் வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் இருவரும் குளச்சலுக்கு சென்று படகு சவாரி செல்ல முடிவு செய்தனர்.

இதையடுத்து விசைப்படகு ஒன்றில் குளச்சலில் இருந்து முட்டத்திற்கு விசைப்படகில் சென்றனர். இவர்களுடன் படகில் 40 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. மணவாளக்குறிச்சி சின்னவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஜெரின் ஜோஸ் படகில் இருந்து தவறி கடலில் விழுந்தார்.

இதையடுத்து அவரை தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து கடலோர பாதுகாப்பு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், மீனவர்கள் தேடியும் ஜெரின் ஜோஸ் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

நேற்றிரவு நீண்ட நேரமாகி விட்டதால் தேடுதல் வேட்டை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று 2-வது நாளாக காலையில் தேடுதல் வேட்டை நடந்தது. ஆனால் ஜெரின் ஜோஸ் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

அவரது கதி என்னவென்று தெரியாததால் அவரது உறவினர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.