கொள்ளை 
செய்திகள்

கொட்டாம்பட்டி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

கொட்டாம்பட்டி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

கொட்டாம்பட்டி:

கொட்டாம்பட்டி அருகே உள்ள மங்களாம்பட்டி கிராமத்தில் பெரிய கோவில் என்று அழைக்கப்படும் ஆதினமிளகி அய்யனார் கோவில் உள்ளது. பழமையான கோவிலான இங்கு 2 வருடங்களுக்கு முன்னர் பல லட்சம் ரூபாய் செலவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவிலின் மதில்சுவரை ஏறி குதித்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், அங்கிருந்த எவர்சில்வர் உண்டியலை உடைத்து அதில் இருந்த லட்சக்கணக்கான பணத்தை திருடி சென்றனர். கடந்த 2 வருடங்களாக கோவில் உண்டியல் எண்ணப்படாமல் இருந்த நிலையில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் கோவிலுக்கு சென்ற பூசாரி கோவில் உண்டியல் உடைக்கபட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் கொட்டாம்பட்டி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி தடயங்களை சேகரித்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.