கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் வெளயேற்றப்படுவதால், ரசாயன கழிவுகளால் நுரை பொங்கி வருவதை படத்தில் காணலாம். 
செய்திகள்

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு 2563 கனஅடி நீர்வரத்து

ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தவாறு உள்ளது. இன்று காலை, அணைக்கு வினாடிக்கு 2,563 கன அடி நீர் வந்தது.

மாலை மலர்

ஓசூர்:

கர்நாடக மாநிலத்தின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் நாள்தோறும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

இதனையடுத்து ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தவாறு உள்ளது. இன்று காலை, அணைக்கு வினாடிக்கு 2,563 கன அடி நீர் வந்தது. அணையின் முழு கொள்ளளவு 44.28 அடி ஆகும். அணையில் 41.33 அடி நீர் இருப்பு இருந்த நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 3,060 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. அணையில் அதிகளவு நீர் வரத்து அதிகரித்து ஆற்றில் அதிகளவில் நீர் வெளியேற்றப்படுவதாலும், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அணையில் ரசாயன கழிவுகள் கலந்து மலை போல் நுரை குவிந்ததால், தரைப்பாலம் வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

தரைப்பாலத்தில் குவிந்த நுரையை, தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி படித்து சுத்தம் செய்தனர். இதனிடையே, நுரை பொங்கி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்ததால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், நுரை பொங்கி காணப்படுவதை ஆர்வத்துடன் செல்போனில் போட்டோ எடுத்தனர்.