கறிவேப்பிலை விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்ததை காணலாம் 
செய்திகள்

கறிவேப்பிலை விலை உயர்வால் கலங்கும் இல்லத்தரசிகள்

காய்கறிகளுக்கு இலவசமாக கிடைத்த கறிவேப்பிலை விலை உயர்ந்துள்ளது. இதனால் காய்கறிகள் வாங்க வரும் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர்.

தஞ்சாவூர்:

சின்ன வெங்காயம், பல்லாரி உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தநிலையில் சமையலில் நறுமனத்திற்காக பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை தற்போது விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த கறிவேப்பிலையில் மருத்துவகுணங்கள், பல்வேறு சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. காரத்துடன் கூடிய கசப்பு சுவையை கொண்ட கறிவேப்பிலையை சைவ-அசைவ உணவுகளில் சேர்த்து கொள்கின்றனர்.

இவ்வாறு மருத்துவம் குணம் கொண்ட கறிவேப்பிலை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. மேற்கண்ட பகுதியில் சாகுபடி செய்யப்படும் கறிவேப்பிலை தஞ்சை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலும் மார்க்கெட் மற்றும் சில்லறை காய்கறி கடைகளில் காய்கறி வாங்குவோர்களுக்கு இலவசமாக கறிவேப்பிலை கொடுப்பது வழக்கம்.

இந்தநிலையில் காய்கறிகளுக்கு இலவசமாக கிடைத்த கறிவேப்பிலை தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு விலை உயர்ந்து காணப்படுகிறது. இதனால் காய்கறி வாங்க வரும் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சில்லறை விற்பனை கடைகளில் ரூ.10 மற்றும் ரூ.20 முதல் விற்பனை செய்யப்படும் கறிவேப்பிலை, மொத்த விற்பனை கடைகளில் கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தஞ்சை தற்காலிக மார்க்கெட் வியாபாரிகள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பருவம் தவறி பெய்த மழையாலும், நிவர் மற்றும் புரெவி புயல்களாலும் கறிவேப்பிலை சாகுபடி பெரிதும் பாதிப்படைந்துள்ளது. வரத்தும் குறைவாக காணப்படுகிறது. சில நாட்கள் வரை கறிவேப்பிலை காய்கறிகளுக்கு இலவசமாகவும், குறைந்த விலைக்கும் பொதுமக்கள் வாங்கி சென்றார்கள். ஆனால் தற்போது கறிவேப்பிலை விலை உயர்ந்து காணப்படுவதால், அவர்கள் வாங்கும் காய்கறிகளுக்கு இலவசமாக கறிவேப்பிலையை கேட்கும் பட்சத்தில் கொடுக்க மறுக்க வேண்டியதுள்ளது என்றனர்.