தூத்துக்குடியில் அகல் விளக்குகள், பனை ஓலைகள் விற்பனை நடந்ததை படத்தில் காணலாம். 
செய்திகள்

கார்த்திகை தீப திருவிழா- அகல் விளக்குகள், பனை ஓலை விற்பனை மும்முரம்

தூத்துக்குடியில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அகல் விளக்குகள், பனை ஓலை விற்பனை மும்முரமாக நடந்தது.

மாலை மலர்

தூத்துக்குடி:

கார்த்திகை தீப திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் வீடுகள், கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். பெண்கள் வீடு முழுவதும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வார்கள். மேலும் பனை ஓலைகளில் கொழுக்கட்டை செய்து வழிபடுவார்கள்.

முன்பு களிமண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை பெண்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். தற்போது ரெடிமேடாக செய்யப்படும் பல வண்ண நிறங்களில் விளக்குகளை பெண்கள் பெரிதும் விரும்பி அதை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மார்க்கெட்டில் பனை ஓலைகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன. ராமநாதபுரம், சாயல்குடி பகுதிகளில் இருந்து பனை ஓலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஒரு ஓலை ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று சிறிய அளவிலான அகல் விளக்குகள் அதிக அளவில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஐஸ்வர்ய லட்சுமி விளக்கு, குபேர லட்சுமி விளக்கு, கும்ப விளக்கு, மயில் விளக்கு, யானை விளக்கு, லட்சுமி பாதம் விளக்கு, துளசி மாட விளக்கு, பாவை விளக்கு போன்ற பலவிதமான வடிவங்களில் அலங்காரத்துடன் கூடிய அகல் விளக்குகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றின் விலை ரூ.2 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதனால் தூத்துக்குடியில் பனை ஓலை, அகல் விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.