சென்னை:
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் ஊழல் முறைகேடு புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து அந்த ஊழல் புகார் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த விசாரணைக்குழு தனது விசாரணையை தொடங்கி உள்ளது.
இதற்கிடையில், சூரப்பாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
அந்த வீடியோவில் பேசிய கமல்ஹாசன், சூரப்பா மிகவும் நேர்மையானவர் எனவும், சூரப்பா போன்ற நேர்மையானவர்கள் வேட்டையாடப்பட்டால், நான் சும்மா இருக்க மாட்டேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வீடியோவையடுத்து கமல்ஹாசன் மீது பல்வேறு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. கமல்ஹாசனின் பேச்சுக்கு அதிமுக தரப்பில் கண்டனக்குரலும் எழுந்தது. மேலும், அவர் பாஜவின் பி டீம் என்றும் சமூகவலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு கமல்ஹாசன் இன்று பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது.
வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை.
திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?
என பதிவிட்டுள்ளார்.