கடமலைக்குண்டு:
கடமலைக்குண்டு அருகே உள்ள அண்ணாநகரை சேர்ந்தவர் செந்தில்குமார். அவருடைய மகன் கிருஷ்ணகுமார் (வயது 7). இவன், அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை கிருஷ்ணகுமார் தனது தாயார் சித்ராதேவியுடன், தனது தோட்டத்துக்கு செல்வதற்காக கடமலைக்குண்டு-தேனி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான்.
கண்டமனூர் அருகே வந்தவுடன், சித்ராதேவியை விட்டு பிரிந்த கிருஷ்ணகுமார் மட்டும் தோட்டத்துக்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்றான். அப்போது கடமலைக்குண்டுவில் இருந்து தேனி நோக்கி அருண் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கிருஷ்ணகுமார் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவனை சித்ராதேவி மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவனை, மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கிருஷ்ணகுமார் பரிதாபமாக இறந்தான். இந்த விபத்து தொடர்பாக, மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற அருண் மீது, கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.